
கரூரில் விஜய் பிரசாரத்தின்போது 41 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்து வருகிறது. ‘போலீஸ் பாதுகாப்பு இல்லாததால்தான் 41 பேர் இறந்தனர். இதில் தி.மு.க.வின் சதி இருக்கிறது’ என்று த.வெ.க. தரப்பும், ‘விஜய் பல மணி நேரம் தாமதமாக மட்டுமல்லாது, பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், ‘அடுத்து கரூர் மாநகராட்சி ஊழலை வெளிக்கொண்டுவரவும் விஜய் உத்தரவிட்டுள்ளார்’ என்கிறார்கள்.
இதையடுத்து, கரூர் மாநகராட்சியில் எந்தெந்த துறைகளில் ஊழல் நடந்துள்ளது என்பது குறித்து ஃபைல் தயார் செய்து ஆவணங்களை சென்னைக்கு அனுப்பியுள்ளனர். ஊழலை வெளிக்கொண்டு வர அ.தி.மு.க கவுன்சிலர்கள் மட்டுமல்லாது, மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்களும் ஒத்துழைத்துள்ளனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க. மாநகராட்சி கவுன்சிலர் ஆண்டாள் தினேஷ், “கரூர் மாநகராட்சியில் நடந்த ஊழலுக்கு அளவே இல்லை. பேனா, பென்சில் வாங்கியதாக பொது நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் எடுக்க அனுமதி கோரி தீர்மானம் அனுப்பினார்கள். ‘பேனா, பென்சில் வாங்க 50 லட்சம் ரூபாயா? என்று அதிர்ச்சியடைந்து, மக்கள் வரியை எப்படியெல்லாம் கொள்ளை அடிக்கிறார்கள் என்பதை கரூர் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக நானும், இன்னொரு அ.தி.மு.க கவுன்சிலர் சுரேஷும் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேட்டி கொடுத்தோம். உடனே மேயர் கவிதா, ‘மாநகராட்சி தீர்மானத்தில் உள்ள தகவல்களை வெளியே சொன்னது தவறு என்று என்னையையும் சுரேஷையும் மூன்று மாதம் சஸ்பெண்ட் செய்தார்.
ஜே.சி.பி. வாடகை செலவு 50 லட்சம் ரூபாய் என்று பணத்தை எடுத்தபோது. 50 லட்சத்தை வாடகையா கொடுக்குறதுக்கு பதிலா, 50 லட்சத்துல புதுசா மூணு ஜே.சி.பி. வாங்கலாமே? இப்படிலாம் ஊழல் பண்ணாதீங்க என்று திமுக கவுன்சிலர்களே மேயருக்கு கண்டனம் தெரிவித்தனர். ஒப்பந்தப் பணியாளர்கள் நியமிப்பது முதல் டெண்டர் வரை எங்கும் ஊழல் எதிலும் ஊழலாக மாநகராட்சி இருந்துவருகிறது. என்னைப்போல் கேள்வி கேட்கும் கவுன்சிலர்களை சஸ்பெண்ட் செய்து தன்னிச்சையாக செயல்படும் மேயராக சுவிதா இருக்கிறார். இப்போது பொறுப்பேற்றிருக்கும் புதிய அரசு நடவடிக்கை எடுக்குமா, இல்லையா என்பது குறித்து எனக்கு தகவல் எதுவும் தெரியாது’ என்றார்.
பெயர் சொல்ல விரும்பாத திமுக. கவுன்சிலர் ஒருவர், ”மாநகராட்சியில் இதுவரை நடந்த பணிகளுக்கான டெண்டர்கள், எத்தனை கோடி செலவு செய்யப்பட்டது. பொது நிதியிலிருந்து எத்தனை கோடி செலவு செய்யப்பட்டது. அது என்னென்ன செலவினங்கள், அதன் மூலம் எத்தனை கோடியில் ஊழல் நடந்துள்ளது என்பது குறித்து தெளிவான ஆவணங்கள் தயார் செய்து சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேயரின் கணவரும், கரூர் தி.மு.க. வடக்கு நகரச் செயலாளருமான கணேசனை மீறி மாநகராட்சியில் யாரும் டெண்டர் எடுக்க முடியாது. அப்படியே எடுத்தாலும் கணேசன் சொன்னால்தான் மேயர் பில் போட்டுத் தருவார். இப்படி பல ஆதாரங்களுடன் மேயர் இதுவரை எவ்வளவு ஊழல் செய்திருக்கிறார் என தி.மு.க. தலைமைக்கு புகார் அனுப்பினோம்.
இதையடுத்து தலைமை உடனடியாக கணேசனின் வடக்கு நகரச் செயலாளர் பதவியை பறித்தது. அதோடு மேயரை ராஜினாமா செய்யச் சொல்லியும் உத்தரவிட்டது. ராஜினாமாவை அறிவிக்க மேயர் கவிதாவும் பத்திரிகையாளர்களை அழைத்தார். அந்த இடைவெளியில் ஒரு மூத்த அமைச்சர் மேயருக்கு ஆதரவாக தலைமையிடம் பேசி தலைமையை சமாதானம் செய்த நிலையில் அதற்குள் பத்திரிகையாளர்கள் வந்துவிட்டனர். உடனே மேயர், ‘சும்மா டீ சாப்பிடலாம்னு உங்களை வரச் சொன்னேன் என சமாளிக்க, பத்திரிகையாளர்கள் கோபமாக வெளியேறினர்.
மேலிட செல்வாக்கால்தான் தி.மு.க. கவுன்சிலர்கள் யாரையும் மதிக்காமல் கோடிக்கணக்கில் ஊழல் செய்து மாநகராட்சியை நாசமாக்கினர். சுவிதா போன்ற ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டதால்தான் தி.மு.க. தோல்வியை சந்தித்துள்ளது. அதனால்தான் தி.மு.க. கவுன்சிலராகிய நாங்களே எந்தெந்த திட்டத்தில் எவ்வளவு முறைகேடுகளை செய்துள்ளனர் என்கிற விவரங்களை தற்போதைய ஆட்சியாளர்களிடம் கொடுத்து விட்டோம்” என்றார்.
இதுகுறித்து மேயர் கவிதாவிடம் கேட்டோம். “முதலில், எனக்கு பேச நேரமில்லை’ என்றவர், பிறகு “மாநகராட்சியில் ஊழல் எதுவும் நடக்கவில்லை. அதிமுக திமுக கவுன்சிலர்கள் என்மீது சொல்லும் புகார்கள் குறித்து நான் ஒன்றும் கருத்து சொல்ல முடியாது” என்று முடித்துக்கொண்டார்.
கரூரை விரைவில் சுத்தப்படுத்தினால் மண்ணின் மைந்தர்களுக்கு மகிழ்ச்சியே!



Leave a Reply