TRB உதவிப் பேராசிரியர் தேர்வு சர்ச்சை… புதிய குற்றச்சாட்டுகள் பரபரப்பு!

Home TamilNadu TRB உதவிப் பேராசிரியர் தேர்வு சர்ச்சை… புதிய குற்றச்சாட்டுகள் பரபரப்பு!
TRB உதவிப் பேராசிரியர் தேர்வு சர்ச்சை… புதிய குற்றச்சாட்டுகள் பரபரப்பு!
Spread the love

தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசுக் கல்லூரிகளில், ஏராளமான உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அவற்றில் 2,708 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை டி.ஆர்.பி. எனும் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்தாண்டு டிசம்பரில் நடத்தியது. சுமார் 42,064 பேர் பங்கேற்ற இந்தத் தேர்வின் முடிவுகள், கடந்த மார்ச் மற்றும் ஜூன் இறுதியில் வெளியாகின. இதில்தான் தற்போது பலநூறு கோடி ரூபாய் முறைகேடு சர்ச்சை வெடித்துள்ளது!

இதுகுறித்து பாதிக்கப்பட்ட தேர்வர் ஒருவரிடம் பேசினோம். “முதல் தாள் 150 மதிப்பெண் கொண்டது. இது வினா விடை முறையில் இருக்கும். இரண்டாவது தாள் 50 மதிப்பெண். இதற்கு விரிவான பதிலை தரவேண்டும். தவிர, கல்லூரிப் பணி அனுபவம் இருந்தால் 15 மதிப்பெண், நேர்முகத்தேர்வுக்கு 15 மதிப்பெண் உண்டு. இந்த நடைமுறையில் பிரச்னை என்னவென்றால், முதல் தாளுக்கான ரிசல்ட் சரியாக வெளியானது. ஆனால் 50 மதிப்பெண்ணுக்கான தேர்வில்தான் பெரும் மோசடி நடந்துள்ளது.

அதாவது தமிழ் பாடத்தில் III மதிப்பெண் எடுத்த ஒருவருக்கு, 50 மதிப்பெண்ணுக்கான தேர்வில் ஜீரோ மதிப்பெண் கொடுத்துள்ளனர். அதுவே, மற்றொரு பாடப்பிரிவு முதல் தாளில் 54 மதிப்பெண் எடுத்த ஒருவருக்கு 50 மதிப்பெண்ணுக்கான தேர்வில் 49 மதிப்பெண் கொடுத்துள்ளனர். இப்படியாக, முதல் தாளில் 90+ மார்க் பெற்றிருந்த சுமார் 150 பேருக்கு ஜீரோ தொடங்கி ஒற்றை இலக்கத்திலான மதிப்பெண் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அதுவே 70, 80 மதிப்பெண்ணை முதல் தாளில் பெற்றிருந்த பலருக்கு 50 மதிப்பெண்ணுக்கான தாளில் கிட்டத்தட்ட முழு மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது தகுதி பெறாத சிலர் தகுதி பெற்றதாக ‘புட் அப் மார்க் போடப்பட்டுள்ளது.

இதற்காக பல தேர்வர்களிடம் தலா 30 லட்சம் வரை வாங்கப்பட்டதாக கேள்விப்பட்டோம்” என்றார் அதிர்ச்சி விலகாமல். இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர் வீ.அரசுவிடம் பேசினோம். “குறைந்த மதிப்பெண் பெற்ற சிலரிடம் பணம் வாங்கிக்கொண்டு தேர்ச்சிபெற வைக்கும் சதிதான் இதில் நடந்திருக்கிறது. அதன்படி குறைவான மதிப்பெண் பெற்றவர்களை மேலே கொண்டுவந்து விடுவார்கள். தவிர, எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் நேர்முகத் தேர்வுக்கு தலா 15 மதிப்பெண் கொடுத்து அவர்களை சுலபமாக பணியில் அமர்த்திவிடலாம் என முயற்சி நடந்துள்ளது.

இப்போது முந்தைய ஆட்சியாளர்களை குறை சொல்லி, இந்தத் தேர்வை மொத்தமாக ரத்து செய்ய முயல்வார்கள். அது மிகவும் முட்டாள்தனம். இவ்வளவு நாளாக கஷ்டப்பட்டு படித்தவர்களின் உழைப்பு, அரசுப் பணம், நேரம் எல்லாம் வீணாகிவிடும். எனவே, குளறுபடியான இரண்டாம் தாளை மட்டும் மறுமதிப்பீடு செய்து தேர்வு முடிவுடன் இணைக்க வேண்டும்” என்றார்.

சில முன்னாள் பேராசிரியர்களோ, “முதல் தாள் தேர்வு முடிவுகள் பல கோச்சிங் சென்டர்களிடம் இருந்திருக்கும். அவற்றில் சில கோச்சிங் சென்டர்களை நடத்துபவர்கள், ‘கட்டாயம் இப்பணியை வாங்கியே ஆக வேண்டும்’ என முயலும் சில தேர்வர்களிடம் பணம் பெற்று, தேர்வு வாரியம் மற்றும் உயர்கல்வித்துறையிடம் இப்படி ஒரு யோசனையை சொல்லி மோசடி திட்டத்தை உள்ளே புகுத்தியிருக்கிறார்கள்.

கடந்த 2017ம் ஆண்டு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்விலும் இதே போன்ற முறைகேடு நடந்திருக்கிறது. குறிப்பாக, 2005ல் என்.எல்.சி.யில் நடந்த தேர்வு ஒன்றில் சாஃப்ட்வேரில் ப்ரோக்ராம் செய்து ஏமாற்றினர். அதே பாணியில் இது நடந்திருப்பதாகவே தெரிகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கல்லூரி பேராசிரியர்கள் தேர்வை பணம் காய்க்கும் மரமாக மாற்ற பார்க்கிறார்கள்” என்றனர்.

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவோ, “அரசுப் பள்ளி, கல்லூரிகளில் நிரந்தர ஆசிரியர்களை போடாமல் இருந்தால் மாணவர் சேர்க்கை குறையும். அதனால் ஆசிரியர்களை மேலும் குறைப்பார்கள். இறுதியில் அரசுப் பள்ளி, கல்லூரிகள் தானாக செத்துவிடும். இதுதான் அவர்களின் நோக்கம். அரசுக் கல்லூரிகளில் சுமார் 50% நிரந்தரப் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த இடங்களில் கௌரவ விரிவுரையாளர்கள் என்ற பெயரில் தற்காலிக ஊழியர்களை நியமித்துவிடுகிறார்கள்.

இதுபோன்ற தேர்வில் எவ்வித தவறுகளும் நடைபெறக்கூடாது என்பதற்காகத்தான் டி.ஆர்.பி மற்றும் உயர் கல்வித்துறையில் முக்கிய அதிகாரிகள் உயர் பொறுப்பில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் தேர்வு முடிவுகளைக்கூட பரிசோதிக்காமலா இவர்கள் வெளியிடுவார்கள்? ‘முதல் தாளில் அதிக மதிப்பெண் பெற்ற சிலருக்கு எப்படி இரண்டாம் தாளில் ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் வந்தது?’ என ஓரிரண்டு தாள்களை சோதித்துப் பார்த்திருந்தாலே முறைகேடுகள் அம்பலமாகியிருக்கும். அதை ஏன் செய்யவில்லை?

குளறுபடிகளால், முறையாக படித்து இப்போது கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்டன. இந்த தேர்வெழுதிய தேர்வர்களின் கனவும் கேள்விக்குறியாகிவிட்டது. ஆக இனியும், “தேர்வை ரத்து செய்துவிட்டு புதிய தேர்வை நடத்துகிறேன்’ என சொல்வதோ, ‘இரண்டாம் தாளை மட்டும் மறுமதிப்பீடு செய்கிறேன்’ என சொல்வதோ சரியாக இருக்காது. ஏனெனில், அதில் மாற்றம் வரும்போது இம்முறை தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் செல்வார்கள்: அதனால் இது மேலும் காலம் தாழ்த்தப்படும்.

மேலும், இந்தத் தேர்வை எழுதிய தேர்வர்கள் பலரும் பி.ஹெச்.டி முடித்து நீண்டகாலம் தற்காலிக பணியாளராக பணியாற்றியவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தகுதியானவர்கள்தான். எனவே, கல்வித்தகுதி, சீனியாரிட்டி, எக்ஸ்பீரியன்ஸ் அடிப்படையில் இந்த நியமனத்தை நடத்த வேண்டும்” என்றார்.
இதற்கிடையே, ‘இந்த முரண்பாடுகள் தவறுதலான தரவு பதிவு மற்றும் தட்டச்சுப் பிழைகளே தவிர, தேர்வு நடைமுறையில் எந்தவித குறைபாடோ, முறைகேடோ நடைபெறவில்லை’ என ஆசிரியர் தேர்வு பயம் வாரியம் விளக்கமளித்துள்ளது. திறன்மிகுந்த இளம்தலைமுறையினரை உருவாக்கும் பேராசிரியர் நியமனத்தில் முறைகேட்டை அனுமதிக்கக்கூடாது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India