
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடர்பாக சின்னத்திரை நடிகை வைஷாலி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியது. தனக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கவில்லை என்றும், தன்னைப் போல பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், இந்தத் திட்டத்தை திரும்பப் பெற்று பழைய நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இந்த வீடியோ மின்வாரியத்தின் கவனத்திற்கு சென்ற நிலையில், அதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. வைஷாலியின் புகார் தொடர்பாக மின்வாரிய குழுவினர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் முழுமையான முகவரியை கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல்களை வழங்குவதாக கூறிய அவர், பின்னர் இதுவரை விவரங்களை வழங்கவில்லை என்றும், பலமுறை தொடர்புகொள்ள முயன்றும் அழைப்பை ஏற்கவில்லை என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.
https://x.com/tn_factcheck/status/2087552562635690078?s=20
மின் இணைப்பு விவரங்கள் கிடைத்தால், பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்து, தேவையான மறுஆய்வு மேற்கொண்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் நிறுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களையும் தமிழக அரசின் தகவல் நம்பகத்தன்மை பிரிவு மறுத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 1.42 கோடி நுகர்வோர் பயனடைந்து வருவதாகவும், ஜூன் மாதத்தில் 59.31 லட்சமும், ஜூலை மாதத்தில் 60.92 லட்சம் நுகர்வோர்களும் இலவச மின்சார சேவையை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Leave a Reply