கெடு முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட கட்டிடங்களுக்கு பூட்டி சீல் வைக்கப்படும் என்றும், அதன்பின்னர் இடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. 10 முதல் 15 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த சில வழக்குகளில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மேலும், 3 வீடுகளின் உரிமையாளர்கள் கட்டிடங்களில் உள்ள FSI விதிமீறல்கள் மற்றும் கட்டிட விலகல்களை சரிசெய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். CRZ-II விதிகளின்படி, 1991-ம் ஆண்டில் ஏற்கெனவே இருந்த சாலை அல்லது அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்பின் கடல்புறம் அல்லாத பகுதியில் மட்டுமே கட்டுமானம் மேற்கொள்ள அனுமதி உள்ளது. அங்கு அனுமதிக்கப்பட்ட FSI அளவு 0.8 ஆகும்.
கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டிய 192, 194 மற்றும் 197-வது வார்டுகளில் இந்த கட்டிடங்கள் அமைந்துள்ளன. கடலோரப் பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் தொடர்பான ஆய்வை மாநகராட்சி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
சுமார் 400 கட்டிட உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், மேலும் 400 பேர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையிடம் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்குகளை கூடுதல் செயலாளர் ஆய்வு செய்து வருகிறார்.
கடந்த 2020-ம் ஆண்டிலேயே சுமார் 700 கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி முடிவு செய்திருந்தது. ஆனால் கொரோனா காலம், பின்னர் நடைபெற்ற தேர்தல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக நடவடிக்கை தாமதமானது.
இதனிடையே, பல ஆண்டுகளுக்கு முன்பு அரசின் அனுமதியுடன் கட்டப்பட்ட வீடுகளுக்கு தற்போது CRZ விதிமீறல் என நடவடிக்கை எடுப்பது நியாயமில்லை என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல கோடி ரூபாய் செலவு செய்து வீடுகளை கட்டியுள்ளதாகவும், முறையாக சொத்து வரி, மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பழைய கட்டிடங்களுக்கு விலக்கு அளித்து, இனி புதிய விதிமீறல் கட்டிடங்கள் உருவாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குடியிருப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





Leave a Reply