தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா அரசு தொடர்ந்து தாமதித்து வந்த நிலையில், விவசாயிகளின் நிலைமை என்னவாகும் என்று கேள்வி எழுந்ததது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெரும் கவலையில் இருந்த நிலையில் தற்போது கர்நாடக அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதற்காக அணையில் குறைந்தபட்சம் 90 அடி நீர்மட்டம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றிரவு நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.43 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சீராக இருப்பதால், விரைவில் 90 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணையின் நீர்மட்டம் தேவையான அளவை எட்டியதும் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக குறுவை சாகுபடிக்கான பணிகளை தொடங்குவதற்கு மேட்டூர் அணை திறப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மேட்டூர் அணையை திறக்கும் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அணை திறப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ தேதி மற்றும் நிகழ்ச்சி விவரங்கள் அரசு தரப்பில் உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது.
காவிரி நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டினால், டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். இதனால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணை திறப்பை எதிர்நோக்கி உள்ளனர்.
மேலும் நீண்ட இழுப்பறிக்கு பின்னால் மேட்டூர் அணை திறக்க உள்ளதாகவும், இதற்கு முதலமைச்சர் விஜய் என்ன நடவடிக்கை எடுத்துப்பார் என்று கேள்விகள் எழுகின்றன.





Leave a Reply