தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு.. என்னென்ன பிரச்சனைகள் விவாதிக்கப்படும்?

Home TamilNadu தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு.. என்னென்ன பிரச்சனைகள் விவாதிக்கப்படும்?
தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு.. என்னென்ன பிரச்சனைகள் விவாதிக்கப்படும்?
Spread the love

மத்திய-மாநில அரசுகளின் உறவை வலுப்படுத்தும், 31-வது தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு சென்னை அடுத்த மாமல்லபுரம் அருகே உள்ள கோவளத்தில் இன்று நடைபெறவுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டிற்கான பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஏற்பாடுகளைத் தமிழ்நாடு அரசு விரிவாகச் செய்துள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக 1956-ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் 5 மண்டலக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. அதில் ஒன்றான தென்னக மண்டலக் குழுவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசமும் உறுப்பினர்களாக உள்ளன.

மத்திய உள்துறை அமைச்சர் இதன் நிரந்தரத் தலைவராகவும், மாநாட்டை நடத்தும் மாநிலத்தின் முதலமைச்சர் அந்த ஆண்டிற்கான துணைத் தலைவராகவும் செயல்படுவர். அதன்படி, இந்த ஆண்டு நடைபெறும் இம்மாநாட்டுக்கு முதலமைச்சர் விஜய் துணை தலைவராக இருக்கிறார்.

சுழற்சி முறையில் நடத்தப்படும் இம்மாநாட்டின் 30-வது கூட்டம் கடந்த 2022-ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர், எல்லை மற்றும் கடலோரப் பாதுகாப்புப் பிரச்சினைகளை நீதிமன்றத்திற்குச் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளும் தளமாக இது திகழ்கிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். அதேபோல அண்டை மாநிலங்களின் முதலமைச்சர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.

மாமல்லபுரம் அருகே உள்ள கோவளம் நட்சத்திர விடுதியில் இம்மாநாடு நடைபெறுகிறது. இதனையொட்டி செங்கல்பட்டு மற்றும் சென்னை காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. விருந்தினர்களுக்கான தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகளைத் தமிழ்நாடு அரசு முறைப்படி ஒருங்கிணைத்துள்ளது.

தென்மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் உரிமை சார்ந்த பல முக்கிய அம்சங்கள் இம்மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளன. குறிப்பாக:

தொகுதி மறுசீரமைப்பு: மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால், குடும்பக் கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செயல்படுத்திய தென்மாநிலங்களின் நாடாளுமன்ற இடங்கள் குறைந்துவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இது குறித்து மத்திய அரசிடம் தென்மாநிலங்கள் இணைந்து கூட்டாகக் குரல் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நதிநீர்ப் பிரச்சினைகள்: காவிரி நதிநீர் பகிர்வு, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு மற்றும் பாலாறு விவகாரம் தொடர்பாக அண்டை மாநிலங்களுடன் தமிழ்நாடு அரசு ஆலோசனைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

நிதிப் பகிர்வில் நிலவும் சவால்கள் மற்றும் மாநில உரிமைகள் குறித்துத் தென்மாநிலங்கள் தங்களது கருத்துகளை ஒரே குரலில் வெளிப்படுத்தும் முக்கிய ஜனநாயக நிகழ்வாக இம்மாநாடு பார்க்கப்படுகிறது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India