
மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்தும், வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) சார்பில் பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் வி. ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்த அவர், மாநில அரசும் விவசாயிகளின் வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு. வீரபாண்டியன், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்களிடையே வலுவான ஆதரவு உள்ளது. தற்போதும் ஆயிரக்கணக்கான தொண்டர்களை திரட்டும் வலிமை எங்களிடம் இருக்கிறது. ஜனநாயகத்திற்காகவும், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படவும், தேவையெனில் தனித்தும் செயல்படவும் தயாராக உள்ளோம்” என்றார்.
இடைத்தேர்தலில் மு.க.ஸ்டலின் குறித்து கருத்து தெரிவித்த அவர், “திராவிடக் கட்சிகளுக்கு ஆதரவான பொதுவான வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்ற கருத்தை மறுப்பதில்லை. ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும், எந்தத் தொகுதியிலும் போட்டியிடலாம். ஆனால் இறுதி முடிவை மக்கள் தான் தீர்மானிப்பார்கள்” என்று கூறினார்.
மேலும், தவெக ஆட்சி ஒரு மாதத்தில் கவிழும் என மு.க. ஸ்டாலின் கூறிய கருத்து பதிலளித்த அவர், “ஸ்டாலின் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தல்ல. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், மூத்த அரசியல்வாதியுமான கருணாநிதியிடம் அரசியல் கற்ற ஒருவர் இத்தகைய கருத்துகளைத் தவிர்க்க வேண்டும். சட்டத்தின் வரம்புக்குள் தவெக அரசு தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் அடிப்படை” என தெரிவித்தார்.



Leave a Reply