கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், அப்பகுதியில் 39 சென்ட் காலியிடத்தை வாடகைக்கு பெற்று மினி திரையரங்கு கட்ட திட்டமிட்டிருந்தார். காலியிடத்துக்கு மாநகராட்சியில் வரி செலுத்துவதற்காக சுந்தராபுரம் வரிவசூல் மையத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வரும் யமுனாதேவி (59) என்பவரை அணுகியுள்ளார்.
அப்போது காலியிடத்துக்கு வரி விதித்து கொடுக்க ரூ.45 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர் நடைபெற்ற பேரத்துக்கு பிறகு ரூ.40 ஆயிரம் வழங்க பிரகாஷ் ஒப்புக்கொண்டார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரகாஷ் இதுகுறித்து கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை யமுனாதேவியிடம் வழங்குமாறு போலீஸார் அறிவுறுத்தினர்.
அதன்படி, பிரகாஷை அலுவலகம் அருகே உள்ள பேக்கரிக்கு வருமாறு யமுனாதேவி அழைத்துள்ளார். அங்கு பிரகாஷிடம் இருந்து ரூ.40 ஆயிரம் லஞ்சப் பணத்தை பெற்றபோது, மறைந்திருந்து கண்காணித்த கூடுதல் எஸ்.பி. ராஜேஷ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் யமுனாதேவியை கையும் களவுமாக கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து யமுனாதேவி பணியாற்றி வந்த அலுவலகம் மற்றும் அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தினர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஆட்சி பொறுப்பேற்றத்தில் இருந்து இந்த ஆட்சி தூய ஆட்சி, கிளீன் ஆட்சி என்று முதலமைச்சர் விஜய் மார்தட்டிக் கொண்டிருக்கும் நிலையில், அவரது வசமுள்ள உள்ளாட்சித் துறையில் லஞ்சம் வாங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.




Leave a Reply