
இந்தியாவின் 80 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் முதல்முறை தேசிய கொடியை ஏற்றினார்.
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று (ஆகஸ்ட் 15) முதல்முறையாகத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு, முதலமைச்சராக அவர் பங்கேற்கும் முதல் சுதந்திர தின விழா இதுவாகும்.
சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய், நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து காரில் புறப்பட்டார். மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே வந்தடைந்ததும், காவல்துறையின் மோட்டார் சைக்கிள்கள் முன்னும் பின்னும் அணிவகுக்க அவர் கோட்டைக்கு அழைத்து வரப்பட்டார்.
காலை 8.35 மணியளவில் கோட்டை முன் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்த முதலமைச்சரைத் தலைமைச் செயலாளர் வரவேற்பளித்து அழைத்துச் சென்றார். அங்குத் திரண்டிருந்த காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் விஜய், பின்னர் திறந்த ஜீப்பில் சென்று அவர்களின் அணிவகுப்பைப் பார்வையிட்டார்.
தொடர்ந்து காலை 8.45 மணிக்குக் கோட்டை கொத்தளத்தில் மூவர்ணத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். கொடியேற்றத்திற்குப் பிறகு நாட்டு மக்களுக்குச் சுதந்திர தின உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து தகைசால் தமிழர் விருது, ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகசத்திற்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல்ஆளுமை விருது, சமூகநலச் சேவைக்கான விருதுகள் மற்றும் சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுகளை வழங்கி வெற்றியாளர்களைக் கௌரவித்து வருகிறார்.



Leave a Reply