‘வந்தே மாதரம்’ vs தமிழ்த்தாய் வாழ்த்து … சுதந்திர தின விழாவில் என்ன நடக்கும்?

Home TamilNadu ‘வந்தே மாதரம்’ vs தமிழ்த்தாய் வாழ்த்து … சுதந்திர தின விழாவில் என்ன நடக்கும்?
‘வந்தே மாதரம்’ vs தமிழ்த்தாய் வாழ்த்து … சுதந்திர தின விழாவில் என்ன நடக்கும்?
Spread the love

கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து நீடித்து வரும்நிலையில், குறிப்பாக தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்த பிறகு, அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும் வரிசை தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.

தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று, முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்ற நிகழ்வின்போது தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பாக ‘வந்தே மாதரம்’ பாடல் முதலிலும் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவதாக  பாடப்பட்ட நிலையில், இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிலும் ‘வந்தே மாதரம்’ பாடல் முதலிலும், தேசிய கீதம் இரண்டாவதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் இசைக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரிலான கல்வி நிறுவனத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, தொடர்ந்து நீடித்து வரும் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலையே முதலில் பாட வேண்டும் என ஆகஸ்ட் 10 ஆம் தேதி  தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு முந்தைய நாளில் ஆகஸ்ட் 9 ஆம்  தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்ற நிகழ்வும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

இந்த நிலையில், நாளை நடைபெற உள்ள சுதந்திர தின விழாவின்போது தேசியக் கொடியேற்றுவதற்கு முன் ‘வந்தே மாதரம்’ பாடலும், தேசியக் கொடியேற்றிய பிறகு தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, கீழமை நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான சர்ச்சை தமிழ்நாட்டில் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், நாளை நடைபெற உள்ள சுதந்திர தின விழாக்களில் ‘வந்தே மாதரம்’ மற்றும் தேசிய கீதத்துடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்படுமா? என்ற கேள்வி தற்போது அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் எழுந்துள்ளது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India