
திருநெல்வேலி மாவட்டத்தில் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த 27 வயதான கவின், சென்னையில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவர் பள்ளிப் பருவம் முதல் பழகி வந்த பெண்ணுடன் காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை 27ஆம் தேதி, திருநெல்வேலி கே.டி.சி. நகரில் உள்ள மருத்துவ மையத்திற்கு சென்றிருந்த கவினை, அந்தப் பெண்ணின் சகோதரர் சுர்ஜித், காதல் உறவை கைவிடுமாறு வலியுறுத்தி அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே சுர்ஜித் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்த வழக்கில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிய சுர்ஜித்தின் தந்தை சரவணன், அவரது தாய் கிருஷ்ணகுமாரி மற்றும் சுர்ஜித் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடி போலீசார் 612 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இதனை ரத்து செய்யக் கோரிய மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில், கவின் ஆணவப்படுகொலை செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் உள்ள அவரது குடும்பத்தினரை சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.



Leave a Reply