தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளரிடம் கூறியதாவது: மார்ச் 15 ஆம் தேதி அடிப்படையில் 5.69 கோடி வாக்காளர்கள் கணக்கிடப்பட்டுள்ளனர் , அந்த எண்ணிக்கையில் பெண்கள் 2.90 கோடி , ஆண்கள் 2.78 ஆகும் மேலும் மூன்றாம் பாலினத்தை சார்ந்த வாக்காளர்கள் 7656. அனைத்து வாக்காளர்கள் அவர்களுடைய பெயர் மற்றும் பூத் எண் சரியாக உள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும் , அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் அடிப்படை வசதிகள் குறித்து அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது
“தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்.23ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.தமிழ்நாட்டில் மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. தமிழ்நாட்டில் வேட்புமனுத் தாக்கல் செய்ய ஏப்.6 கடைசி நாளாகும். மார்ச் 31, ஏப்ரல் 3,4 மற்றும் 5ஆம் தேதிகள் விடுமுறை என்பதால் மனுதாக்கல் செய்ய முடியாது.
தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. தமிழ்நாட்டில் 2,106 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிக்கு வெளியே வாக்காளர்கள் செல்போன்களை பாதுகாக்க பெட்டகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆவணங்கள் இருந்தால் பணம் உடனடியாக திருப்பி அளிக்கப்படும். ஆவணம் இருந்தால் எந்த தொந்தரவும் செய்யக்கூடாது என அதிகாரிகள் அறிவுத்தப்பட்டுள்ளனர். பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படும்.
தேர்தல் நடத்தை விதி அமலான 12 மணி நேரத்தில் ரூ.1.2 கோடி ரொக்கம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 10 வரை தேர்தல் பிரச்சாரம் செய்யலாம். அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் மாநில தலைமை தேர்தல் அதிகாரி இன்று மாலை 3 மணிக்கு முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படும். தேர்தல் நேர விதிமுறைகள், தேர்தல் செலவு தொகை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து இதில் ஆலோசனை செய்யப்படும்”
வரும் 26 ஆம் தேதி வரை புதிய வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்கலாம் 15 நாட்களில் அடையாள அட்டை வழங்கப்படும், தேர்தலை தொடர்ந்து பொதுக்கூட்டங்கள் நடத்த தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் , 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கூடும் பிரச்சாரங்கள் என்றால் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளதா என தேர்தல் ஆணையம் கண்காணிக்கும் மற்ற அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் படி நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply