கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 60-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கள்ளச்சாராய குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுத்ததற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கேள்வி எழுந்தது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தவெக தலைவர் விஜய் ஆகியோர் நேரில் ஆறுதல் தெரிவித்தனர்.
இதையடுத்து, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிசிஐடி போலீசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரிய அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுக்கள் இன்று(நவ. 20) விசாரணைக்கு வந்தது. இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி அமர்வு இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட மனுக்களை விசாரித்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.




Leave a Reply