உயர்நீதிமன்ற உத்தரவை மீறி மனிதர்களை சாக்கடை நிறைந்த கால்வாயில் இறக்கி, எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இன்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தி வரும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி 15-வது மண்டலத்துக்குட்பட்ட சோழிங்கநல்லூர் – மேடவாக்கம் செல்லும் செம்மொழி பிரதான சாலையில் உள்ள தனியார் கல்லூரி எதிரே கால்வாயில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மழைநீர் கால்வாயில் சாக்கடை நிறைந்துள்ள நிலையில், மனிதர்களை இறக்கி எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சாக்கடையை சுத்தம் செய்ய சொன்ன அதிகாரிகளின் செயலுக்கு அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மனித கழிவை மனிதர்களை வைத்து அல்லக்கூடாது என்று நீதிமன்ற உத்தரவு உள்ள நிலையில், இதுபோன்று சாக்கடைகளை ஜேசிபி மற்றும் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்ற வேண்டும்.ஆனால் அதைவிடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மனிதர்களை சாக்கடையில் இறக்கி எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் கால்வாயில் தேங்கியுள்ள சாக்கடையை அல்ல வைத்துள்ளனர். பாதுகாப்பு அம்சம் இன்றி நீதிமன்ற உத்தரவு மீறி சாக்கடை அள்ளிக் கொண்டிருந்தவர்கள் செய்தியாளர்கள் கேமராவில் காட்சிப்படுத்தும்போது, பணிகளை அப்படியே விட்டுவிட்டு அனைவரும் மேலேறி அங்கிருந்து சென்றுவிட்டனர். பலமுறை இதுபோன்ற செய்திகள் தொலைகாட்சி வாயிலாக வந்த வண்ணம் இருந்தாலும், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதை சிறிதும் பொருட்படுத்தாமல் அலட்சியமாக மனிதர்களை கால்வாயில் இறக்கி சாக்கடையை சுத்தம் செய்வது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.




Leave a Reply