ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாட்டால் நாடே ஸ்தம்பித்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவுக்கு 21 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள மக்கள் கரெண்ட் அடுப்புகளை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக , பிளிங்கிட், இன்ஸ்டாமார்ட் மற்றும் ஸெப்டோ போன்ற செயலிகளில் இண்டக்ஷன் அடுப்புகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் அமேசான் தளத்தில் இண்டக்ஷன் அடுப்புகளின் விற்பனை வழக்கத்தை விட 20 மடங்கு அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ப்ளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 4 முதல் 5 நாட்களில் இண்டக்ஷன் அடுப்புகளின் விற்பனை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. கரெண்ட் அடுப்புகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் மின்சார நுகர்வு அதிகரித்துள்ளது. மேலும் கரெண்ட் அடுப்பு பயன்பாடு அதிகரித்துள்ளதால், மின் கட்டணமும் அதிகம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட உள்ளனர்.
விறகு சமையலுக்கு மாறிய ஹோட்டல்கள்
சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. சில ஹோட்டல்கள் கரி மற்றும் விறகுகளை வைத்து சமைக்க தொடங்கியுள்ளன. தமிழகம் முழுவதும் வணிக பயன்பாட்டு சிலிண்டரை பயன்படுத்தக்கூடிய சிறிய ஹோட்டல்கள், தங்கள் கடைகளில் உணவு தயாரிக்கக் கரி அடுப்பு மற்றும் விறகுகளை பயன்படுத்தி வருகின்றன. . அதே போல, மண்ணெண்ணெய் கிடைக்கும் பட்சத்தில், மண்ணெண்ணெய் அடுப்பை பயன்படுத்தும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால், விறகுகளின் தேவையும் 10 மடங்கு அதிகரித்து, அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட ஒரு டன் விறகு ரூ. 500 முதல் ரூ.1000 வரை விலை உயர்ந்துள்ளது. கரியும் கிலோவிற்கு ரூ.35 வரை விலை உயர்ந்துள்ளது. இந்த நிலை நீடித்தால், விரைவில் விறகு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது என ஹோட்டல் உரிமையாளர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.




Leave a Reply