சென்னையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தரைவழிபோக்குவரத்தை சமாளிக்க 3 நாட்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தொடர் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெளி மாவட்டங்களில் இருந்து நீர் அகற்றும் பம்புகள் மற்றும் மரம் வெட்டும் கருவிகள் உள்ளிட்டவை சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள தீயணைப்புப்படை வீரர்கள், ரப்பர் படகுகள் உள்ளிட்ட பொருட்களை தயார் நிலையில் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் பள்ளமான பகுதிகளில் உள்ள மழைகாலத்தில் நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில், சென்னையில் அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் கூடுதல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையின் காரணமாக, பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில், காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இடையே 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.




Leave a Reply