இரவோடு இரவாக தமிழக வெற்றிக் கழகத்தின் பேனர் கிழிப்பு 

Home TamilNadu இரவோடு இரவாக தமிழக வெற்றிக் கழகத்தின் பேனர் கிழிப்பு 
இரவோடு இரவாக தமிழக வெற்றிக் கழகத்தின் பேனர் கிழிப்பு 
Spread the love

நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில்தான் விஜயின் அரசியல் எது சார்ந்தது, அக்கட்சியின் கொள்கைகள் என்ன என்பது பற்றியெல்லாம் தெரியப் போகிறது. மேலும், விஜய் அரசியல் களத்தில் வெற்றி பெறுவாரா என்பதைக் கூட அடிப்படையாகத் தீர்மானிக்கும் அளவுக்கு இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. 

இம்மாநாட்டுக்கு தமிழகம் முழுவதிலுமுள்ள தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் வருகை தர உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் கழக நிர்வாகிகள் சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் வழியாக அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பேருந்து நிலையத்தின் சுவற்றில் தமிழக வெற்றிகழகத்தின் முதல் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து மிகப்பெரிய பேனர்  நிர்வாகிகளால் ஒட்டப்பட்டிருந்தது. 

இன்று காலை பார்க்கையில் இந்த பேனர் இரண்டு மூன்றாகக் கிழித்துத் தொங்க விடப்பட்டிருந்ததைக் கண்டு கழக நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். இரவோடு இரவாக மர்ம நபர்கள் இந்த பேனரைக் கிழித்துள்ளனர். தமிழக வெற்றி கழக கட்சியின் நிர்வாகிகள் பேனர் கிழிக்கப்பட்டது தொடர்பாக கட்சி மேலிட தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது குறித்தும் ஆலோசனை செய்து வருகின்றனர். 

இந்த சுவற்றில் பல்வேறு கட்சி பேனர்களும் ஒட்டப்படுகின்றன. மற்ற கட்சி பேனர்கள் இதுவரையிலும் கிழிக்கப்படாத நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பேனர் மட்டும் கிழிக்கப்பட்டிருப்பதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India