சென்னை போன்ற பெரு நகரங்களில் ஸ்விக்கி, ஸ்மோட்டோ போன்ற உணவு டெலிவரி சேவை செய்யும் நிறுவனங்கள் 24 மணி நேர உணவு டெலிவரி சேவையை வழங்கி வருகின்றது. இந்த நிறுவனங்களில், உணவு டெலிவரி செய்யும் வேலையில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஊழியர்கள் மழை, வெயில் போன்ற கடினமான சூழல்களை கூட பொருட்படுத்தாமல், தங்களின் பொருளாதார சூழ்நிலையை உயர்த்தும் எண்ணத்தில் டெலிவரி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
ஆண், பெண் பேதமின்றி அனைத்து தரப்பினரும் இந்த வேலையை செய்து வருகின்றனர். டெலிவரி ஊழியர்களில் 10 சதவீதம் பேர் பெண்கள் உள்ளதால் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் பணிபுரிய வேண்டிய சூழல் உள்ளது. ஓய்வு எடுக்க இடமில்லாமல், சாலை ஓரங்களில் கூடுகிறார்கள். இந்நிலையில் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு சென்னையின் முக்கிய சாலைகளில்,ஏசி ஓய்வறையை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு அறிவிப்பை வெளியிட்டது.
இதில் 600 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஓய்வறையில், 20 அடி நீளம் 10 அடி அகலத்தில் கழிவறை, குடிநீர், செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் இருக்கும், 25 பேர் வரை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும், மேலும் 20 டூவிலர் வரை பார்க்கிங் செய்யும் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில், அண்ணா நகர், கே.கே.நகரில் விரைவில் திறக்கப்படவுள்ளது. எதிர்காலத்தில் நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தி. நகர் போன்ற பகுதிகளில் குளிரூட்டப்பட்ட ஓய்வு அறைகள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.




Leave a Reply